தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அருண்குமார்
திருவாலங்காடு: “தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது,” என, த.வெ.க., வேட்பாளர் அருண்குமார் குற்றஞ்சாட்டினார்.
திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், த.வெ.க., சார்பில், டாக்டர் அருண்குமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று, திருவாலங்காடு ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டார். காஞ்சிப்பாடி, கூளூர் முத்துக்கொண்டாபுரம், ராமாபுரம் உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆதரவாளர்களுடன் அருண்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, டாக்டர் அருண்குமார் பேசியதாவது:
தொகுதியில் உள்ள பல்வேறு இடங்கள் கிராமப்புறங்களாக உள்ளன. அவற்றில், அடிப்படை வசதிகள் இல்லாததை காண முடிகிறது. த.வெ.க., ஆட்சிக்கு வந்தால், விஜய் தலைமையிலான அரசு, கிராமப்புறங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் த.வெ.க.,விற்கு வரவேற்பு உள்ளது.
இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக வரவேற்பதை பார்க்க முடிகிறது. இதை பார்க்கும் போது, சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது கண்முன்னே தெரிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
உடன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கர், திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் தினேஷ்குமார், திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலர் கவாஸ்கர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபரீஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் இருந்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்