தேர்தலில் முறைகேடு செய்ய பாஜ முயற்சி; மம்தா குற்றச்சாட்டு
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து வரும் நிலையில், தேர்தலில் பாஜ முறைகேடு செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே, சில ஓட்டுச்சாவடிகள் அருகே பாஜ மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. நாடியா மாவட்டத்தின் சாப்ரா தொகுதிக்கு உட்பட்ட 52வது ஓட்டுச்சாவடியில், பாஜ தேர்தல் முகவர் மொஷாரப் மிர் என்பவரை திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், ரத்த காயம் ஏற்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஒரு கும்பல் இரும்புத் தண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் காஞ்ச்ராபாரா நகராட்சியின் திரிணமுல் காங்கிரஸின் 5வது வார்டு கவுன்சிலர் கல்யாண் கர் விதிகளை மீறி நின்று கொண்டிருந்ததாக, பாஜ வேட்பாளர் சுதீப்தா பாசு கேள்வி எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரு தரப்பினையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜ திட்டமிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இரவு நேரத்தில் எங்கள் தொண்டர் எப்படித் தாக்கப்பட்டுள்ளார் என்று பாருங்கள். இது என்ன மாதிரியான ரவுடித்தனம். இதுபோன்ற முறையில் தேர்தல் நடத்தப்படக் கூடாது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க வேண்டும். இது ஜனநாயகத்தின் திருவிழா. ஆனால் பாஜவினர் அதை முற்றிலும் சீரழித்துவிட்டனர். பாஜ தேர்தலில் முறைகேடு செய்ய விரும்புவது தெளிவாகத் தெரிகிறது. கட்சித் தொண்டர்களுக்கு எதிரான வன்முறையும், ஓட்டுப்பதிவு பணிகளுக்கு இடையூறையும் ஏற்படுத்துகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல, முதல்வர் மம்தா பானர்ஜி ரவுடி கும்பல்களுடன் சுற்றித் திரிவதாகவும், வாக்காளர்களை அச்சுறுத்த முயற்சிப்பதாகவும் பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார்.
Advertisement

தோத்த பின் காரணம் சொல்ல , பிஜேபி முறைகேடு பண்ணி ஜெயிக்க பாக்குது , EVM எ, மாத்திட்டங்கா , பிஜேபி fraud பண்ணி தான் ஜெயிச்சது னு சொல்லி , மக்கள் சப்போர்ட் இல்லை னு மட்டும் சொல்ல மாட்டாங்க