'பூத்' அமைக்காமல் தேர்தலை சந்தித்த வேட்பாளர் ஓட்டு கிடைக்குமா என கட்சியினர் குழப்பம்
கட்சி நிதியும், தேர்தல் நிதியும் பெரிதாக கிடைக்காததால், புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட தொகுதியில் கூட்டணியில் போட்டியிட்ட அந்த வேட்பாளர் தொகுதியில் பூத்தே அமைக்காமல் சிக்கனமாக செலவு செய்ததால் எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது புரியாமல் கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
டில்லி கட்சியுடன் கூட்டணியில் உள்ள அந்த பிரபலமான கட்சிக்கு புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட இரண்டு தொகுதி மட்டுமே கிடைத்தது. இதில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் கட்சி நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை திரட்டி தாறுமாறாக செலவு செய்து தொகுதியை தனது வசமாக்கினார்.
ஆனால் மற்றொரு தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் கட்சி நிதி, தேர்தல் நிதியும் பெரிதாக கிடைக்காததால், திண்டாடினார்.
இதனால், பெருமளவு செலவுகளை குறைத்து பிரசாரத்தை ஒரு வழியாக முடித்தார்.
வழக்கமாக கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடுவோர் பூத் அமைத்தே தேர்தலை சந்திக்கும். ஆனால் நிதி பற்றாக்குறையில் சிக்கிய இந்த வேட்பாளர் தான் போட்டியிட்ட தொகுதியில் பூத் அமைத்தால் கையில் இருப்பதும் கரைந்து விடும் என நினைத்து பூத்தே அமைக்காமல் தேர்தலை சந்தித்து முடித்தார்.
இதனால், இவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட பழங்கட்சிக்காரர்கள் வேட்பாளர் செய்த செலவுக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது புரியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்