கடலுாரில் இன்று உதயநிதி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு
- நமது நிருபர் -
கடலுாரில் ஒரே நாளில், த.வெ.க., தலைவர் விஜய்க்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்தால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், முதலில் விண்ணப்பித்த விஜய்க்கு அனுமதி வழங்கி, உதயநிதிக்கு மறுக்கப்பட்டுள்ளது. பின் விஜய் பிரசாரமும் ரத்து செய்யப்பட்டது.
கடந்த 9ம் தேதி, கடலுார் மாவட்டத்தில் மஞ்சக்குப்பம், வடலுார், சேத்தியாதோப்பு, திட்டக்குடி போன்ற இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், அன்று புதுச்சேரி மாநில தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் இருந்து சாலை மார்க்கமாக கடலுார் செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார்.
புதுச்சேரியில் தேர்தல் நடந்ததால், அங்கு மத்திய படை போலீசார், உள்ளூர் போலீசார், முழு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். எனவே, விஜய் பிரசாரத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்படும். மேலும், கடலுார் - புதுச்சேரி எல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு அச்சுறுத்தல், கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதால், அவரது பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இன்று பிரசாரம் செய்ய அனுமதி கேட்டார்.
அதேநேரம், கடலுார் மாவட்டத்தில் உதயநிதி இன்று பிரசாரம் செய்ய போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீஸ் தரப்பில் விஜய் முதலில் அனுமதி கேட்டதால், அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உதயநிதிக்கு வேறு தேதியில் அனுமதி தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடலுாரில் தி.மு.க., வும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் செல்வாக்குடன் இருப்பது போல், த.வெ.க.,வுக்கும் செல்வாக்கு இருக்கிறது.
இந்நிலையில், கடலூரில் இன்று நடைபெறவிருந்த விஜய்யின், தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால், கடலூர் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக, த.வெ.க., தலைமை அறிவித்துள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்