பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: கோகுல இந்திரா பேச்சு
சென்னை: அண்ணா நகர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரான, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அண்ணா நகர் ஆர்ச் பகுதிக்கு உட்பட என்.எஸ்.கே., தெரு, பசும்பொன் தெரு வழியாக சென்று, அ.தி.மு.க., வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து, ஓட்டு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.
அதேபோல், அய்யாவு நாயுடு தெரு அருகில் உள்ள சர்ச்சில், கிறிஸ்துவ மக்களை சந்தித்து, ஆதரவு கோரினார்.
பிரசாரத்தின் போது, கோகுல இந்திரா பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருந்தனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, போதை கும்பல் அட்டகாசம் அதிகரித்து, தமிழகமே சீர்கெட்டு வருகிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், போதை பொருட்களின் புழக்கம் முற்றிலும் தடுக்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திட்டங்கள் அமல்படுத்தப்படும். குறிப்பாக பெண்களுக்கான முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு குழு அமைக்கப்படும்.
அண்ணா நகர் தொகுதியில் பிரச்னைகள் ஏற்பட்டால், என்னை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், வசதியை ஏற்படுத்துவேன். மேலும், பார்க்கிங், மின்தடை, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண திட்டங்கள் கொண்டு வருவேன்.
இவ்வாறு கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்