Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அடிக்கடி சோர்வடையும் விஜய்: அடுத்தடுத்து ரத்தாகும் பிரசாரம்

 அடிக்கடி சோர்வடையும் விஜய்: அடுத்தடுத்து ரத்தாகும் பிரசாரம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருப்பதால், அவரின் தேர்தல் பிரசாரம் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், 233 தொகுதிகளில் த.வெ.க., போட்டியிடுகிறது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில், விஜய் போட்டியிடுகிறார். அதன்படி, பெரம்பூர், திருச்சி கிழக்கு, கொளத்துார், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்துள்ளார்.

கடந்த 10ம் தேதி காரைக்குடியில் பிரசாரம் செய்ய, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் விஜய் சென்றார். அங்கிருந்து சாலை வழியாக, காரைக்குடி செல்ல தாமதமானதால், விஜய் பிரசாரத்தில் பேசவில்லை.

இந்நிலையில், விஜயின் நேற்றைய கடலுார் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இன்று நடக்கவிருந்த கும்மிடிப்பூண்டி பிரசாரமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, சென்னை வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் நடக்கவிருந்த விஜயின் பிரசாரமும், இதுபோல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று அவர் கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது; அதுவும் நேற்றிரவு வரை உறுதி செய்யப்படவில்லை.

த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கோடை காலம் என்பதால், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. ஒரு நாள் பிரசாரம் செய்தால், வெயிலின் தாக்கத்தால், விஜய் ரொம்பவே சோர்வாகி விடுகிறார். எனவேதான், மறுநாள் அவரால் பிரசாரம் செய்ய முடியவில்லை.

எனவே திருச்சி கிழக்கு, புதுச்சேரி, திருநெல்வேலியில் பிரசாரம் செய்து முடித்ததும், அடுத்து இரண்டு நாள் வரையில், வேறு எந்த பிரசாரத்துக்கும் விஜயால் செல்ல முடியவில்லை. எனவேதான், மூன்று நாள்களுக்கு ஒருமுறை விஜய் பிரசாரம் செய்கிறார்.

இந்நிலையில், 10ம் தேதி காரைக்குடி சென்று திரும்பும்போது, விஜய் ரொம்பவே தளர்ந்து விட்டார். நீண்ட காலமாக நடிகராக இருந்தாலும், கோடை வெயிலில் விஜய் வெளியே வந்தது இல்லை. கட்சி துவங்கிய பின், மூன்று ஆண்டுகளில், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, உடலை பழக்கியிருந்தால், தேர்தல் சமயத்தில் அது கைகொடுத்திருக்கும்.

முதல்முறையாக வெயிலில் அலைவதால் உடலில் நீர்சத்து குறைவு ஏற்படுகிறது. சில நேரங்களில் வாந்தி, தலைசுற்றல் கூட அவருக்கு ஏற்படுகிறது.

அதேபோல், வெளி மாவட்டங்களில் பிரசாரம் நடந்தாலும், காலையில் தனது சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்துதான் விஜய் கிளம்புகிறார். மீண்டும் மாலையில், வீட்டுக்கு வந்து விடுகிறார். வெளியில் எங்கும் தங்குவதில்லை. தொடர்ச்சியான விமான பயணம், பிரசாரம், 'ரோடு ஷோ' செய்வதால், விஜய் ரொம்பவே சோர்ந்து விடுகிறார்.

விஜயின் உடல்நலம் சரியில்லாததால்தான் கடலுார், கும்மிடிப்பூண்டி என, த.வெ.க., பிரசாரம் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையில், 'கடந்த சில ஆண்டுகளாக, 'டைப் 2 டயாபட்டிக்ஸ்' எனும் சர்க்கரை நோயால் விஜய் பாதிக்கப்பட்டு உள்ளதால், அடிக்கடி இடதுகால் பாதம் மரத்து போகிறது; உடல் சோர்வும் அதிகமாக உள்ளது. ஒரு நாள் பிரசாரம் செய்தால், அடுத்த நாள் ஓய்வெடுக்க வேண்டிய அளவிற்கு, அவர் உடல் நிலை உள்ளது' என, த.வெ.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

வீடுவீடாக ஓட்டு கேளுங்கள் த.வெ.க., தலைவர் விஜய் அறிக்கை: மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணிக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் சூழலில், த.வெ.க.,வில் பூத் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள். அனைத்து நிர்வாகிகளும், வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பை கொடுங்கள். அனைவரையும் அரவணைத்து பணி செய்யுங்கள். அடுத்த பத்து நாள்களும், காலை, மாலையில் அவரவர் வசிக்கும் இடங்களில், வீட்டுக்கு வீடு தேடித் தேடி மக்களை நேரில் சந்தித்து, த.வெ.க., வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட வேண்டுகோள் வையுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போரில் வெற்றி பெற்று, உண்மையான மக்களாட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ***

Advertisement